×

அரூர் அருகே பயங்கரம் பைக் மீது லாரி மோதியதில் பிஇ பட்டதாரி நண்பருடன் பலி

அரூர், பிப்.20: அரூர் அருகே பைக் மீது கருங்கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில், பிஇ பட்டதாரி மற்றும் அவரது நண்பர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எலவடை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் மகன் சிங்காரவேலன்(23). இவரது நண்பரான அதே ஊரைச்சேர்ந்த மாது மகன் அசோக்குமார்(23). இவர் பிஇ படித்து விட்டு வேலை தேடி வந்தார்.  இந்நிலையில், சிங்காரவேலன் நேற்று மாலை 4 மணியளவில்  சொந்த வேலை காரணமாக, அசோக்குமாருடன் தனது பைக்கில் அரூர் சென்றுள்ளார். பைக்கை சிங்காரவேலன் ஓட்டிச்சென்றார். மெரப்பூர் - அரூர் ரோட்டில் மோபிரிப்பட்டிபுதூர்  தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, எதிரே கருங்கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி, பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சிங்காரவேலன் மற்றும் அசோக்குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார், பலியான இருவரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி டிரைவரான அரூர் எம்.வெள்ளாளப்பட்டியை சேர்ந்த பாஸ்கரன்(40) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் பலியான இருவரும் தலையில் அடிபட்டதாலேயே உயிரிழந்துள்ளனர். அவர்கள் ஹெல்மெட் அணிந்திருந்தால் இந்த உயிரிழப்பு நிகழ்ந்திருக்காது என போலீசார் தெரிவித்தனர். வேப்பம்பட்டி-  அரூர், தர்மபுரி, மொரப்பூர் சாலைகளில் ஜல்லிக்கற்கள், கருங்கல் லோடு ஏற்றி வரும் டிப்பர் லாரிகள் அதிவேகமாக வருவதால், அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே, அதிவேகமாக வரும் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Aroor ,
× RELATED ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை