×

பீர்க்கன்காரணை பகுதியில் போதை ஆசாமிகள் அட்டகாசம்: பொதுமக்கள் கடும் அச்சம்

தாம்பரம்: தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை, காமராஜ் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியிலுள்ள காமராஜ் நகர் குறுக்கு தெருவில் தினமும் இரவு அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் கஞ்சா புகைத்துவிட்டு சாலையில் செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்து வருவதாகவும், வேலைக்கு சென்றுவிட்டு அவ்வழியாக வீட்டிற்கு திரும்பும் பெண்களிடம் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “பீர்க்கன்காரணை, காமராஜ் நகர் பகுதியில் தாம்பரம் விமான தளத்தின் எல்லை முடியும் இடத்தில் மதில் சுவர் ஓரம் உள்ள தெரு வழியாக பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என தினமும் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம்.  அதுமட்டுமின்றி பீர்க்கன்காரணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் காலை மற்றும் இரவு நேரத்தில் இவ்வழியாக வழியாக சென்று வருகின்றனர்.

இந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் தினமும் இரவு நேரங்களில் அங்குள்ள மயானத்தின் அருகே நின்று கொண்டு மது அருந்துவதும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்திவிட்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் வீண் தகராறு செய்து வருவதோடு, இரவு நேரங்களில் வேலை முடித்துவிட்டு அவ்வழியாக நடந்து வரும் பெண்களிடம் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பீர்க்கன்காரணை காவல் நிலைய போலீசாரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்காமல் இருக்கின்றனர்.  முக்கியமாக அப்பகுதிகளில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபடுவதே இல்லை. போலீசார் அலட்சியமாக இருப்பதால் சமூக விரோதிகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : area ,Birkhankarni ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி