×

நகைக்கு பாலீஷ் போடுவதாக கூறி பெண்ணிடம் 6 பவுன் தாலி செயின் பறிப்பு

விருத்தாசலம், பிப். 19: விருத்தாசலம் காந்தி நகரை சேர்ந்தவர் சுந்தர். வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா(24). இவர், நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது, சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், நகைகளை பாலீஷ் போடுவதாகக் கூறி பவித்ரா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது குழந்தையின் கொலுசை பவித்ரா கொடுத்துள்ளார். உடனே அதனை பாலீஷ் போட்டு கொடுத்துள்ளார். பின்னர் வேறு ஏதேனும் நகைகள் இருந்தால் அதனையும் தாருங்கள் பாலீஷ் போட்டு தருகிறேன் என அந்த வாலிபர் கூறியுள்ளார். அதனை நம்பிய பவித்ரா தனது  கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி செயினை கழட்டி கொடுத்துள்ளார். அந்த செயினை வாங்கிய வாலிபர் சாதம் வடிக்கும் குக்கரை எடுத்து வருமாறு கூறினார். அதன்படி அவர் குக்கரை எடுத்து வந்தார்.

உடனே அந்த வாலிபர் அதில் செயினை போட்டு, மஞ்சள் தூளை கொட்டி, 3 விசில் வந்ததும் எடுத்து பாருங்கள் என கூறிவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார். 3 விசில் முடிந்து குக்கரை திறந்து பார்த்தபோது, அதில் தாலிச்செயின் இல்லை. மஞ்சள் தூளை கொட்டி கலக்கியபோது, செயினை மர்ம நபர் திருடியது தெரிய வந்தது. இதுகுறித்து பவித்ரா விருத்தாசலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலீஷ் போடுவதாக கூறி பெண்ணிடம் செயின் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Dali St. ,
× RELATED அரசு ஊழியரை தாக்கி தாலி செயின் பறிப்பு