×

பெரியார் பல்கலை.யில் மது அருந்தும் இடமான விளையாட்டு மைதானம்

ஓமலூர், பிப்.19: பெரியார் பல்கலைக்கழக விளையாட்டு மைதானம், மது அருந்துபவர்களின் புகலிடமாக மாறியுள்ளது. இரவு நேரங்களில் பலரும் விளையாட்டு மைதானத்தை மது அருந்துவதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.ஓமலூர் அருகே பெரியார் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலை.யில் விளையாட்டு துறை செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான 13 ஏக்கர் நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு திடலை சுற்றி அரசு பொறியியல் கல்லூரி, தண்ணீர் தொட்டி, கோட்டகவுண்டபட்டி, சாமிநாயக்கன்பட்டி, கருப்பூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. பல்கலைக்கழக மைதானத்தை சுற்றி போதிய சுற்றுச்சுவர், இரவு நேர காவலாளி இல்லாத நிலையில், எப்போதும் திறந்த வெளியாகவே உள்ளது. இதனால், இரவு நேரத்தில் உள்ளே நுழைந்து மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, கூடைப்பந்து மைதானத்தில் மது அருந்தி விட்டு பாட்டில்களை உடைத்து போட்டு விட்டுச் செல்கின்றனர். இதனால், அங்கு வீரர்கள் பயிற்சி பெற முடியாத நிலை காணப்டுகிறது. இதுகுறித்து பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் கூறுகையில், பல்கலைக்கழகத்தில் இரவு நேர காவலர்கள் பற்றாக்குறை உள்ளது. அதனால், இரவு நேரத்தில் விளையாட்டு மைதானங்களை கண்காணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால், மைதானம் உள்ளிட்ட பல்கலைக்கழக பகுதிகளில் இரவு நேரத்தில் கருப்பூர் காவல் நிலைய ரோந்து பணியில் உள்ள போலீசார் கண்காணிக்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Tags : Playground ,Periyar University ,
× RELATED மே தினப் பூங்கா விளையாட்டு மைதானத்தை...