திருச்சி, பிப். 19: குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் கல்லூரி மாணவர்கள் நேற்று ஐஜி அலுவலகம் எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அண்டை நாடுகளில் மதரீதியான துன்புறுத்தலுக்கு ஆளான முஸ்லிம் அல்லாத அகதிகள், 5 ஆண்டுகள் இந்தியாவில் இருந்தால் அவர்கள் குடியுரிமை வழங்கும் விதத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவர்களில் யாரேனும் சட்டவிரோத குடியேறிகளாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் இந்தியாவில் வழக்கை சந்தித்திருந்தால் அவர்களுக்கு இந்த மசோதா பாதுகாப்பு அளிக்கும். இந்த மசோதா குறிப்பிட்ட ஒரு மதத்தை புறக்கணிப்பதாக கூறி அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் முதல் உழவர் சந்தையில் முஸ்லிம் அமைப்பினர் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுபோல் டெல்டாவில் முத்துப்பேட்டை, தஞ்சை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதில் நேற்று ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் மதியம் வகுப்பு முடிந்து திடீரென 250க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ஐஜி அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 3ம் ஆண்டு தாவரவியல் மாணவர் ஹபீப் தலைமையில் திரண்ட மாணவர்கள் சிஏஏவிற்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.