×

புதிய மின்மாற்றி அமைக்க கோரி கேம்பலாபாத்தில் மக்கள் சாலை மறியல் முயற்சி

வைகுண்டம், பிப். 19: கேம்பலாபாத்தில் புதிய மின்மாற்றி அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.  தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அடுத்த கேம்பலாபாத்தில் சுமார்  600க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இருப்பினும் இங்கு ஒரேயொரு மின்மாற்றி மட்டுமே உள்ளநிலையில் அடிக்கடி நிலவும் குறைந்த மின்அழுத்த பிரச்னையால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் ஆழ்வார்திருநகரியில் செயல்படும் 4 செங்கல் சூளைகளுக்கு கேம்பலாபாத் மின்மாற்றியில் இருந்து மின்இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக  கேம்பலாபாத் குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி நிலவும் நிலையற்ற மின் சப்ளையால் தெரு விளக்குகள் எரியாததோடு வீடுகளில் உள்ள மின்சாதனங்கள்  அடிக்கடி பழுதடைவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஆழ்வார்திருநகரி மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த  கேம்பலாபாத் பகுதி மக்கள், ஊராட்சி துணைத்தலைவர் ஹாஜா உதுமான், ஜமாத் தலைவர் முகமது  கனி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட திரண்டு வந்தனர். தகவலறிந்து விரைந்துவந்த ஆழ்வார்திருநகரி போலீசார் சமரசப்படுத்தினர்.
இதுகுறித்து உரிய  நடவடிக்கை எடுப்பதாக மின்வாரியத்தினர் போலீசாரிடம் உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட மக்கள், தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச்  சென்றனர். இருப்பினும் சாலை மறியல் முயற்சியால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.


Tags : road ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...