×

ஆரணி பேரூராட்சி அலுவலகம் அருகே சமூக விரோதிகளின் புகலிடமாக மாறிய கால்நடை மருத்துவமனை

ஊத்துக்கோட்டை, பிப். 19: பெரியபாளையம்  அருகே ஆரணி பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் விவசாயிகள் அதிகளவு உள்ளனர். மேலும் இங்குள்ள ஆரணி பேரூராட்சி அலுவலகம் அருகில் 50 ஆண்டுக்கு முன்பு கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டது. இந்த கால்நடை மருத்துவமனைக்கு ஆரணி, மங்களம், மல்லியங்குப்பம்,  புதுப்பாளையம், குமரபேட்டை, திருநிலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆடு, மாடு, கோழி, பூனை, நாய் உள்ளிட்ட விலங்குகள் உடல் நிலை பாதிக்கப்பட்டால் சிகிச்சைக்காக அதை வளர்ப்பவர்கள்  கொண்டு வருவார்கள்.

இந்நிலையில் இந்த கால்நடை மருத்துவமனை மிகவும் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டு, மேற்கூரை தளத்தின் சிமென்ட் சிலாப்புகள் உடைந்த நிலையில் உள்ளது.  எனவே புதிய கால்நடை மருத்துவமனை கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு புதிய கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.இந்நிலையில் இந்த கட்டிடத்தில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் மது அருந்துவது, சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  எனவே இரவு நேரத்தில் பாராக மாறி வரும் பழுதடைந்த கால்நடை மருத்துவமனையை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ இந்த மருத்துவமனையின் அருகில் உள்ள பழுதடைந்த  கால்நடை மருத்துவமனை கட்டிடத்தில் இரவு நேரத்தில் குடிகாரர்கள் மது அருந்துவது, சூதாடுவதுமாக உள்ளனர். பெண் குழந்தைகள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அவர்கள் நடந்து கொள்கின்றனர். எனவே பழைய கட்டிடத்தை இனியாவது இடித்து அகற்ற வேண்டும்’’ என்றனர்.

Tags : Veterinary Hospital ,anti-socials ,Aranyapuram Bureau ,
× RELATED கோயம்பள்ளி கிராமத்தில் கால்நடை...