விருதுநகர், பிப்.18: தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை இயற்றக் கோரி கருப்பு சட்டை அணிந்து வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். விருதுநகர் கலெக்டரிடம் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் அளித்த மனுவில், ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற அசாணை வெளியிடக்கோரி பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். கோரிக்கையை நிறைவேற்றக்கோரி பல அறப்போராட்டங்களை நடத்தி அரசுக்கு தெரிவித்தோம்.
அரசு ஆய்வுக்குழு மட்டும் அமைத்து நடவடிக்கை இல்லாமல் அமைதியாக உள்ளது. கோரிக்கையை தீவிரப்படுத்த கடந்த ஆண்டு நவ.10 முதல் தமமுக சார்பில் அரசாணை கிடைக்கும் வரை கருப்புச்சட்டை அணிவது என முடிவெடுத்து 100 நாட்களாக கருப்பு சட்டை அணிந்து கோரிக்கை எழுப்பி வருகிறோம். 100வது நாளில் கலெக்டரிடம் மனு அளித்து எங்களது கோரிக்கையை தெரிவிக்கிறோம். காலதாமதம் இன்றி தமிழக அரசு தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வெளியிட வேண்டுமென தெரிவித்துள்ளனர்.