குஜிலியம்பாறை, பிப். 18: குஜிலியம்பாறை அருகே மர்மநபர்கள் சதியால் மானாவாரி காடுகள் அடிக்கடி பற்றி எரிந்து வருகிறது. இதனை அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறையினர் திண்டாடி வருகின்றனர்.குஜிலியம்பாறை அருகே கரிக்காலி சுப்பிரமணியகவுண்டனூர் கரட்டுகோட்டை பெருமாள் கோயில் அருகே சுமார் 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட மானாவாரி காடு உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு திடீரென தீ பிடித்துள்ளது. காற்றின் வேகம் சற்று அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பிடித்து எரிந்தது. சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. பின்னர் இதுகுறித்து குஜிலியம்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் தீ மளமளவென பற்றி எரிந்ததால் கட்டுக்குள் கொண்டு வரவில்லை. பின்னர் பல மணிநேரம் போராடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
இதேபோல் கடந்த பிப்.3ம் தேதி சுப்பிரமணியகவுண்டனூரை சேர்ந்த பெரியசாமி (49), அருணாச்சலம் (58), கருப்பணன் (62), மாரிமுத்து (55), பெருமாள் (80) ஆகியோருக்கு சொந்தமான சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட மானாவாரி காட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பயிரிடப்பட்ட சோளத்தட்டை, கம்பு, எள் உள்ளிட்ட பயிறு வகைகள் முற்றிலும் எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது. இதேபோல் அப்பகுதியில் உள்ள மானாவாரி காடுகளில் அடிக்கடி தீ பற்றி எரிவதும், பின்னர் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதுமாக உள்ளனர். கரிக்காலி சுப்பிரமணியகவுண்டனூரை சுற்றியே இந்த தீ சம்பவம் நடந்து வருகிறது. இந்த நாச வேலையில் ஈடுபடும் மர்மநபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இதனால் குஜிலியம்பாறை தீயணைப்பு துறையினர் பாடு படு திண்டாட்டமாக உள்ளது. எனவே போலீசார் தீ வைக்கும் மர்மநபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.