கோவில்பட்டி, பிப்.18: கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையை நீக்கக்கோரி சமூக நீதி கூட்டமைப்பினர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள முறைகேடுகளை களைய வேண்டும் என்றும், பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி 5வது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் தலைமையில் ஏஐடியூசி, ஐஎன்டியூசி, ஏஐசிசிடியூ, எல்பிஎப், எம்எல்எப், அமைப்புசாரா அண்ணா தொழிற் சங்கம், பூலித்தேவர் மக்கள் நல இயக்கம் உள்ளிட்ட சமூக நீதி கூட்டமைப்பினர் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து கூட்டமைப்பினர் தங்களது கோரிக்கை மனுவை வருவாய் கோட்டாட்சியர் விஜயாவிடம் வழங்கினர். இதில் ஐஎன்டியூசி மாவட்ட பொது செயலாளர் ராஜசேகரன், ஊழல் எதிர்ப்பு இயக்கம் மாவட்ட செயலாளர் ராமசுப்பு, அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கருப்பசாமி, அண்ணா தொழிற் சங்க தாலுகா செயலாளர் ராமகிருஷ்ணன், மாவீரன் பகத்சிங் மன்ற ரத்ததான கழகம் காளிராஜ், அம்பேத்கர் சிலை பாதுகாப்பு குழு தலைவர் தாவீதுராஜா, முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.