கொள்ளிடம், பிப். 18: கொள்ளிடம் அருகே பழையாறு மீன் பிடி துறைமுகத்தில் அதிவேக விசைப்படகுகளை அகற்ற அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன் பிடி துறைமுகத்தில் 300 விசைப்படகுகள், 250 பைபர் படகுகள் மற்றும் 200 நாட்டுப்படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். இந்நிலையில் துறைமுகத்தில் அதிவேக விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் சிறிய வகையிலான விசைப்படகு உரிமையாளருக்கு இடையே மீன் பிடிப்பதில் கடந்த 8 மாதங்களாக பிரச்னை இருந்து வருகிறது. இது குறித்து அதிகாரிகள் மீனவ பிரதிநிதிகளுடன் பல முறை பேச்சு வார்த்தை நடத்தியும் சுமுகமான தீர்வு ஏற்படவில்லை. இதனால் அதிவேக விசைப்படகுகள் அங்கீகரிக்கப்படாத மற்றும் மீன்பிடி துறையில் பதிவு செய்யப்படாத படகுகளாக அறிவிக்கப்பட்டு கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் சுமார் 80 அதிவேக விசைப்படகுகள் கடந்த 8 மாதங்களாக எந்த பயனுமின்றி துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளான. இந்நிலையில் அங்கீகரிக்கப்படாத படகுகள் துறைமுகத்தில் நிறுத்தக்கூடாது என்றும் அவைகளை அகற்ற வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு சிறிய ரக விசைப்படகு உரிமையாளர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் நடராஜன், ஆய்வாளர்கள் பாலு, தீனதயாளன் மற்றும் சீர்காழி டி.எஸ்.பி வந்தனா மற்றும் கொள்ளிடம் புதுப்பட்டினம் போலீசார் பழையாறு துறைமுகத்துக்கு நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டு மீனவ பிரதிநிதிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிறிய ரக விசைப்படகுகளுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருக்கும் அதிவேக விசைப்படகுகளை அகற்ற அறிவுறுத்தினர்.
இது குறித்து பழையாறு விசைப்படகு உரிமையாளார் சங்க தலைவர் அருள்செழியன் கூறுகையில் அதிவேக விசைப்படகுகள் துறைமுகத்தில் இடையூறாக விதிக்கு புறம்பாகவும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கடந்த சில தினங்களாக அனைத்து விசைப்படகுகளும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அனைவருக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. படகுகள் துறைமுகத்தை விட்டு வெளியேறாத தடையாக நிறுத்தப்பட்டுள்ள அதிவேக விசைப்படகுகளை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் இதற்கு உடந்தையாக இருந்து வரும் மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளார்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.