உடுமலை,பிப்.18:சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உடுமலையில் இருந்து தென்னை நார் ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரூ.1400 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி, உடுமலை, கிணத்துக்கடவு, ஆனைமலை, நெகமம் உள்ளிட்ட இடங்களில் 750 தென்னை நார் ஆலைகள் இயங்கி வருகின்றன. விவசாயிகளிடம் இருந்து தென்னை மட்டைகளை வாங்கி, 80 சதவீதம் நார் தயாரித்தும், 20 சதவீதம் மதிப்பு கூட்டு பொருளாகவும் ஏற்றுமதி செய்கின்றனர். இத்தொழில் மூலம் சுமார் ஒரு லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் இருந்து 80 சதவீத தென்னை நார் பொருட்கள் சீனாவுக்கு ஏற்றுமதியாகிறது. தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உடுமலையை சேர்ந்த தென்னை நார் ஆலை உரிமையாளர் முருகானந்தம் கூறியதாவது: பொள்ளாச்சி, உடுமலை வட்டங்களில் உள்ள நார் தொழிற்சாலைகளில் இருந்து சீனாவுக்கு மட்டும் நார் ஏற்றுமதியாகிறது. அங்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏற்றுமதி தடைபட்டுள்ளது. எனவே, மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்து கொடுத்தால், தொழிலாளர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
நலிவடையாமல் இருக்க அரசுகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். தொழிலாளர்களையும் பாதித்துள்ளதால் அரசாங்கம் கவனத்தில் கொள்ளவேண்டும். சீனாவில் இருந்து வரவேண்டிய பணம் அங்கேயே நின்றுவிட்டது. தடையில்லாமல் வர்த்தகம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த 2 மாதங்களாக ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரூ. 1400 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தொழில் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கேரளாவிலும், கர்நாடகாவிலும் இருப்பதுபோல் இங்கும் கயிறு வாரியம் அமைக்க வேண்டும். தென்னை பொருளாதார நகரத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். இந்த இரண்டும் செய்தால்தான் இந்த தொழில் பொலிவுபெறும். புதிய ஆய்வகங்களை ஏற்படுத்தி, ஏற்றுமதிக் குண்டான வாய்ப்பை மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தி தரவேண்டும்.