ஈரோடு, பிப். 18: ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மக்கள் நீதிமையத்தின் வடகிழக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனத்திற்கு இரட்டை வரி வசூல் செய்யப்படுகிறது. பொதுப்பணித்துறையினர், ஊராட்சி நிர்வாகம் என இருவருக்கும் வாகனத்திற்கான கட்டணத்தை தர வேண்டியது உள்ளதால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த இரட்டை வரி வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும்.
குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க அணைப்பகுதியில் அமைந்துள்ள புறக்காவல் நிலையத்தில் போலீசாரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். பராமரிப்பு மற்றும் பயன்பாட்டில் இல்லாத கண்காணிப்பு கோபுரத்தை பராமரித்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு விட வேண்டும். ஆண்களுக்கும் உடை மாற்றும் அறை கட்டிக் கொடுக்க வேண்டும். பூங்கா, உடைமாற்றும் அறைகள், அணை பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். இதில் கோபி நகர செயலாளர் ஜி.சி.சிவக்குமார், மாவட்ட மகளிரணி சுதா செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.