×

தாயின் சேலையில் தொட்டில் கட்டி விளையாடிய சிறுவன் கழுத்து இறுகி பலி

நாகர்கோவில், பிப்.18:  நாகர்கோவிலில் தாயின் சேலையில் தொட்டில் கட்டி விளையாடிய 7ம் வகுப்பு மாணவன், கழுத்து இறுகி பரிதாபமாக இறந்தான்.நாகர்கோவில் கோட்டார் முதலியார் வடக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ் (41).  இவர் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆன்றோ விஜி. கால்நடைத்துறையில் சூப்பிரெண்டாக இருக்கிறார். இவர்களுக்கு ஆன்றோ ஷப்ரீன் (12) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் ஆன்றோ ஷப்ரீன் 7ம் வகுப்பு படித்து வந்தான். படிப்பில் சிறந்து விளங்கிய ஆன்றோ ஷப்ரீன், அதிக சுட்டித்தனமும் செய்வான். நேற்று முன் தினம் (ஞாயிறு) சதீஷ் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோர் பெரியகாடு கோயிலுக்கு சென்று இருந்தனர். ஆன்றோ ஷப்ரீன் மட்டும் வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்தான்.

அப்போது விளையாட்டு தனமாக வீட்டில் உள்ள பேனில், தாயின் சேலையை தொங்க விட்டு, தொட்டில் கட்டி விளையாடினான். இதில் திடீரென ஆன்றோ ஷப்ரீன் கழுத்தில் சேலை இறுகியது. அவனால் அதில் இருந்து மீள முடியவில்லை. இந்த சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு இருந்த பாட்டியும், அக்கம் பக்கத்தினரும் உள்ளே ஓடி வந்தனர். ஆன்றோ ஷப்ரீன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், ஆன்றோ ஷப்ரீனை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்ததில், ஆன்றோ ஷப்ரீன் இறந்தது தெரிய வந்தது. கோட்டார் போலீசார் சென்று விசாரணை நடத்தி, ஆன்றோ ஷப்ரீன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். விளையாட்டு வினையில் முடிந்து. சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Tags :
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு