×

ராஜாக்கமங்கலம் அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு

நாகர்கோவில், பிப்.18: ராஜாக்கமங்கலம் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் குமரி மாவட்ட கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர். கன்னக்குறிச்சி கீழவூர் தலைவர் ராஜதுரை, ஓய்வு பெற்ற ஆசிரியர் முத்துசாமி ஆகியோர் குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் ஊர் ராஜாக்கமங்கலம் - குளச்சல் சாலையில் அமைந்துள்ளது. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு வசிக்கின்றனர். இந்த பகுதியில் சாலை ஓரங்களில் மதுபிரியர்கள் மதுபாட்டிலை வாங்கி தென்னந்தோப்புகளில் குடித்துவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்கின்றனர். இதனால் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்தநிலையில் கல்லுக்கட்டி, கிருஷ்ணபுரம் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில், புதியதாக மதுக்கடை திறக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிகிறது. பொதுமக்கள் நலன் கருதி, மதுக்கடை திறப்பதை தள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், ஊர் நிர்வாகிகள், விஜயன், கண்ணன், ராஜேஷ், டேவிட்ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : task shop ,Rajakamangalam ,
× RELATED ராஜாக்கமங்கலம் அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது