×

திருவள்ளூர் அருகே தண்ணீர் தொட்டியில் கூலி தொழிலாளி சடலம் மீட்பு

திருவள்ளூர், பிப். 18:திருவள்ளூர் அருகே தண்ணீர் தொட்டியில் கூலி தொழிலாளி சடலமாக மிதந்தார். அவரை யாராவது அடித்து கொலை செய்து, சடலத்தை வீசி சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருவள்ளூர் அடுத்த மப்பேடு காலனியை சேர்ந்தவர் மோகன் (55). கூலித்தொழிலாளி. இவர், அதே பகுதியில் இறந்த ஒருவரின் இறுதி சடங்கில் கடந்த 15ம் தேதி கலந்து கொண்டார். பின்னர் அன்று இரவு அதே பகுதியில் நடந்த தெருக்கூத்து பார்க்க சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் அடுத்த மப்பேடு பகுதியை சேர்ந்த மனோகரன். மப்பேடு - பணணூர் சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே கடைகள் கட்டி வருகிறார். அதற்கு தேவையான தண்ணீர் தேக்கி வைக்க தொட்டி கட்டியுள்ளார். அந்த தொட்டியில் மோகன் சடலமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து தகவல் அறிந்ததும் மப்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அழுகிய நிலையில் கிடந்த மோகனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிந்து தெருக்கூத்து பார்த்துவிட்டு வரும்போது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மோகன் இறந்தாரா? அல்லது முன்விரோதத்தில் அவரை யாராவது கடத்தி சென்று கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசி சென்றார்களா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.


Tags : wage laborer ,water tank ,Tiruvallur ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...