வேப்பனஹள்ளி, பிப்.17: வேப்பனஹள்ளி அருகே அளேகுந்தானை கிராமத்தில், திம்மராயசுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா இரண்டு மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக கிராம மக்கள் உண்டியலில் விழும் பணம் மற்றும் பொருட்களை நீண்ட நாட்களாக சேமித்து வந்தனர். சுவாமி சிலைக்கான வெள்ளி ஆபரணங்கள் ஆகியவற்றை கோயிலில் உள்ள பீரோவில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம ஆசாமிகள் கோயிலுக்குள் புகுந்து உண்டியல் மற்றும் பீரோவை உடைத்து பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
காலையில் அவ்வழியே வந்த பொதுமக்கள் உண்டியல் மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், வேப்பனஹள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர். வேப்பனஹள்ளி பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் நான்கு கோயில்களில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தொடர் கோயில் கொள்ளைகளால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.