கம்பம், பிப். 17: கம்பம் பகுதியில் புறவழிச்சாலைக்காக, தாழ்வாகச் செல்லும் மின்வயர்களை உயர்த்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தேனி மாவட்டம், கேரளாவின் எல்லைப்பகுதியாக உள்ளது. இம்மாவட்டத்தின் வழியாக கேரளாவில் உள்ள உலகப்புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர். மேலும் கேரளாவில் உள்ள தேக்கடி, இடுக்கி, தூக்குபாலம், பருந்துப்பாறை, திருவனந்தபுரம், கொச்சின், மூணாறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத்தளங்களுக்கும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதனால், மாவட்டத்தில் பெரியகுளம், தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இதைக் குறைக்கும் வகையில் பெரியகுளம், தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ரூ.280.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
இதன்மூலம், கடந்தாண்டு ஜூலை மாதத்தில் தேனி மாவட்டத்தில் 6 இடங்களில் 43 கிலோ மீட்டர் தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் துவங்கி பணி தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், புறவழிச்சாலையின் குறுக்கே தாழ்வாகச் செல்லும் மின்வயர்களால் விபத்து ஏற்பட வாய்புள்ளது. இதனால், தாழ்வாகச் செல்லும் மின்வயர்களை அகற்றிவிட்டு, புதியதாக மின்கோபுரம் அமைத்து, மின்வயர்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதனடிப்படையில் கம்பம் பகுதியில் புறவழிச்சாலை பகுதியில் குறுக்கே செல்லும் மின்வயர்களை மாற்றுவதற்காக புதிய மின்கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன.