சேலம், பிப்.17:சேலம் அம்மாபேட்டை நாமமலையில் காட்டுத் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால், ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலாயின.
தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பகல் நேரத்தில் வெளுத்து வாங்கும் வெயிலால், மரங்கள் காய்ந்து வருகின்றன. குறிப்பாக மலைப்பகுதிகளில் இலையுதிர் காலம் என்பதால், மரங்கள் மொட்டையாகின்றன. அத்துடன் வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால், புல், பூண்டுகளில் தீ பற்றும் நிலையும் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஏற்காடு சேர்வராயன் மலை, ஆத்தூர் கல்வராயன் மலை, மேட்டூர் பாலமலை, பச்சமலை பகுதிகளில் தீ தடுப்பு பணியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், சேலம் மாநகரில் அம்மாபேட்டை குமரகிரி பகுதியில் உள்ள நாம மலையில் நேற்று மாலை தீ பற்றி எரிந்தது. வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கரட்டில், காய்ந்த மரங்களில் தீ பற்றியுள்ளது. இது காற்றின் காரணமாக வேகமாக பரவி, பரவலாக கொளுந்துவிட்டு எரிந்தது. இதுபற்றி மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். உடனடியாக வன ஊழியர்கள், இரவில் சென்று பார்த்தனர். ஆனால், தீயை அணைக்கும் பணியை மேற்கொள்ள முடியவில்லை. நள்ளிரவில் கொளுந்து விட்டு தீ எரிந்தது. இதனால், ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலாயின. இன்று(17ம் தேதி) காலையில் தீயணைப்பு பணியை முடுக்கி விடுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.