திருப்பூர்,பிப்.17:திருப்பூர் மணிகாரம்பாளையத்தில் உள்ள பழைய இரும்பு, பேப்பர் கடையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியை சேர்ந்தவர் அய்யம்பெருமாள்(31). இவர் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக திருப்பூர் மணியகாரம்பாளையத்தில் பழைய இரும்பு, பேப்பர், பழைய துணி மற்றும் பிளாஸ்டிக் ஆகிய பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீர் தீ பற்றியது. தீ கொழுந்து விட்டு எரிந்ததை பார்த்த அருகில் வசித்தவர்கள் அய்யம்பெருமாளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து, பரவாமல் தடுத்தனர். அதற்குள் அங்கிருந்த பழைய இரும்பு, பேப்பர், கழிவு துணிகள்
மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்