கும்பகோணம், பிப்.17: போலியாக வக்கீல் ஸ்டிக்கரை வாகனங்களில் பயன்படுத்தும் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் கும்பகோணத்தில் நடந்த வக்கீல்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு கும்பகோணம் வக்கீல் சங்க தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். செயலாளர் தரணிதரன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், வெளிமாநிலங்களில் சட்டப்படிப்பை முடித்து கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வக்கீலாக வேலை பார்த்து வருபவர்கள் வக்கீல்களாக பதிவு செய்திருந்தால் அவர்கள் தங்களது சான்றிதழ்களை பார் கவுன்சிலில் ஒப்படைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு பார் கவுன்சில் எடுக்கும் சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கு கும்பகோணம் வக்கீல்கள் சங்கம் முழு ஒத்துழைப்பை தரும்.வக்கீல்கள் ஸ்டிக்கரை வக்கீல்கள் அல்லாத நபர்கள் பல்வேறு வாகனங்களில் ஒட்டி அதனை தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.போலியாக வக்கீல்கள் ஸ்டிக்கரை பயன்படுத்தும் நபர்கள் மீது போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.