அறந்தாங்கி, பிப்.17: அறந்தாங்கி மண்டிக்குளம் மாரியம்மன் கோவில் அருகே செல்லும் நகராட்சி குடிநீர் குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பில் இருந்து குடிநீர் வெளியேறுகிறது. மேலும் அந்த உடைப்பில் இருந்து கழிவுநீர் கலப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் பல நாட்களாகியும் உடைப்பை நகராட்சி நிர்வாகம் சீரமைக்கவில்லை. இதனால் தொடர்ந்து குடிநீர் வெளியாகி வருகிறது.
எனவே நகராட்சி நிர்வாகம் குடிநீர் வீணாவதை தடுப்பதோடு குடிநீருடன் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.