விழுப்புரம், பிப். 17: விழுப்புரத்தில் நடந்த முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் 300 பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விழுப்புரம் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், நேற்று முன்தினம் தொடங்கியது. ஆட்சியர் அண்ணாதுரை தலைமை தாங்கி துவக்கி வைத்தார். முதல் நாளில் 25 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கபடி, வாலிபால், ஹாக்கி, கூடைப்பந்து, இறகு பந்து ஆகியவை நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலிருந்தும் 1,500 பேர் கலந்துகொண்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று நீச்சல் போட்டி, குத்துச்சண்டை, டேக்வாண்டோ ஆகிய போட்டிகள் நடந்தது.
நீச்சல் போட்டி பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடந்தது. 50 மீட்டர், 100 மீ, 25 மீ பிரிஸ்டைல், பேக் ஸ்டோக், பிரஸ் ஸ்டோக், பட்டர் பிளை ஸ்டோக் ஆகிய பிரிவுகளின் கீழ் நீச்சல் போட்டிகள், தொடர் நீச்சல் போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்டம் முழுவதும் சுமார் 300 பேர் கலந்துகொண்டனர். இதேபோல் உள்விளையாட்டரங்கில் டேக்வாண்டோ, குத்துச்சண்டை போட்டிகள் நடந்தது. இன்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தடகளப் போட்டிகள் நடக்கிறது. மாவட்ட அளவிலான குழு மற்றும் தனித்திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற ஒவ்வொருவருக்கும் முதல் பரிசாக ரூ.1000, 2ம் பரிசு ரூ.750, 3ம் பரிசு ரூ.500 வழங்கப்பட்டது. மேலும், மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.