வந்தவாசி, பிப்.17: வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் பூ வைத்து வரக்கூடாது என ஆசிரியர் தடை விதித்ததாக இந்து முன்னணியினர் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் புகார் அளித்தனர்.வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி பேசினார்.இதில், செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், தாசில்தார் வாசுகி, ஒன்றியக்குழு தலைவர் ஜெயமணி ஆறுமுகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர்கள் டிகேபி.மணி, ஆர்.அர்ஜூனன், ஏ.லோகேஸ்வரன், வி.தங்கராஜ், கே.பாஸ்கர் ரெட்டியார், எஸ்.தர்மதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி முடிந்த பின்னர் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் புறப்பட்டபோது, அங்கு வந்த இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் டி.ஆறுமுகம் உள்ளிட்ட 10 பேர் கொண்ட இந்து முன்னணியினர் அவரை முற்றுகையிட்டனர். இப்பள்ளியில் உள்ள உதவி தலைமை ஆசிரியர் மாணவிகளை பூ வைத்துக் கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு வரக்கூடாது என கூறியதால் 10க்கும் மேற்பட்ட மாணவிகள் சைக்கிள் வழங்கும் விழாவை புறக்கணித்து விட்டு சென்றுள்ளனர்.
மேலும் பூ வைத்து வரக்கூடாது என கூறுவதற்கு யார் உதவி தலைமை ஆசிரியருக்கு அதிகாரம் கொடுத்தது. உதவி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் பள்ளி முன்பாக நாளை (இன்று) போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.அப்போது அமைச்சர் இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார். இதையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.