தக்கலை, பிப். 17: கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து குமரி மாவட்டத்தில் நீர்நிலைகள் மற்றும் ஒதுக்குப்புறமான பகுதிகளில் கொட்டி செல்லும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது. இதுபோல் இறைச்சி கழிவுகளை தீவனம் தயாரிப்பதற்காகவும் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்கின்றனர். இதனால் அந்த வாகனம் செல்லும் பகுதிகளில் துர்நாற்றம் வீசி பொதுமக்களை கலங்கடித்து வருகிறது. இந்த நிலையில் தக்கலை போலீசார் நேற்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. விசாரித்தபோது அதில் கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி திருநெல்வேலிக்கு கொண்டு செல்வதாக டிரைவர் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அந்த லாரியை பறிமுதல் ெசய்து தக்கலை காவல் நிலையம் அருகில் நிறுத்தினர். ஆனால் லாரியில் இருந்து கழிவுநீர் பாய்ந்து அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றவர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர். இதையடுத்து அந்த லாரியை மருந்துக்கோட்டையில் உள்ள பத்மநாபபுரம் நகராட்சி உரக்கிடங்கில் ெகாண்டு நிறுத்தினர். ஆனால் இதற்கு நகராட்சி சார்பில் சுகாதார அலுவலர் ராமலிங்கம் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் நகராட்சி சார்பில் லாரிக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் லாரியை மீண்டும் கேரளாவுக்கு திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தினர்.