×

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பராமரிப்பு இல்லாத கால்வாய்

அம்பத்தூர், பிப். 17: அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் கால்வாய்கள் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இதனால், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டால் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அம்பத்தூர், பாடி, கொரட்டூர், முகப்பேர், அத்திப்பட்டு, மண்ணூர்பேட்டை, மங்களபுரம், பட்டைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்த்து சிறிய, பெரிய கம்பெனிகள் சுமார் 5 ஆயிரம் உள்ளன.மேலும் 100க்கு மேற்பட்ட ஏற்றுமதி ஆடை நிறுவனங்கள், சாப்ட்வேர், கால் சென்டர்களும் உள்ளன. இங்கு சென்னை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து தினமும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வந்து செல்கின்றனர்.இந்த தொழிற்பேட்டையின் உட்புற சாலை பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இவைகள் சில இடங்களில் திறந்த நிலையிலேயே உள்ளது. மேலும், இந்த கால்வாயில் கழிவுநீர் தான் விடப்படுகிறது. இந்த கால்வாய்கள் பல இடங்களில் முறையாக பராமரிக்காததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வடிகால் வசதி முழுவதுமாக இல்லை. பல இடங்களில் கால்வாய்கள் திறந்த நிலையிலேயே தான் உள்ளன. இதன் வழியாக பல ஆண்டாக மழைநீர் சென்று வருகின்றன. இங்குள்ள ராசாயன, ஏற்றுமதி ஆடை நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மழைநீர் கால்வாயில் விடப்படுகிறது. மேலும், தொழிற்சாலைகளில் இருந்து கழிவுகளும் பல இடங்களில் உள்ள கால்வாயில் தான் கொட்டப்படுகிறது. இதனால் மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாயாக மாறி விட்டது. இந்த கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கால்வாயில் தூர்நாற்றம் வீசி வருகிறது’’ என்றனர்.


Tags : Maintenance Canal ,Ambattur Industrial Estate ,
× RELATED அம்பத்தூர் தொழிற்பேட்டையில்...