×

ஆதம்பாக்கம் தனியார் வங்கியில் போலி நகை மூலம் 18 லட்சம் மோசடி : நகை மதிப்பீட்டாளர் கைது

ஆலந்தூர்: திருவொற்றியூர், சக்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (46). இவர், ஆதம்பாக்கம், சிட்டி லிங்க் சாலையில் ஒரு தனியார் வங்கியில் கடந்த 10 ஆண்டுகளாக நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஆதம்பாக்கம், எஸ்பிஐ காலனியை சேர்ந்த ராஜம்மாள் என்பவர், இந்த வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்துள்ளார். இவற்றை சுப்பிரமணி தங்க நகை என மதிப்பீடு செய்து, 18 லட்சம் நகை கடன் அளித்துள்ளார். இதை அதிகாரிகள் சோதனை செய்தபோது போலி என தெரியவந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் சீனிவாசன் மற்றும் உயர் அதிகாரிகள், ஆதம்பாக்கம் போலீசில் சுப்பிரமணி மற்றும் ராஜம்மாள் ஆகியோர் மீது வங்கி உயர் அதிகாரிகள் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி நகைகளை அடமானம் வைத்து பணத்தை ஏமாற்றிய இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில், திருவொற்றியூர் பகுதியில் தலைமறைவாக இருந்த சுப்பிரமணியை நேற்று முன்தினம் அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், நானும், ராஜம்மாளும் கூட்டாக சேர்ந்து ஒரு தொழிலில் முதலீடு செய்வதற்காக, அவர் மூலம் போலி நகைகளுக்கு பொய்யாக மதிப்பீடு செய்து, அதன் மூலம் 18 லட்சத்தை கடன் பெற்று, ராஜம்மாளிடம் கொடுத்தேன் என சுப்பிரமணி கூறியதாக தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் ராஜம்மாளை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Jew smuggler ,bank ,Adambakkam ,
× RELATED திருச்சி துவாக்குடி கனரா வங்கியில்...