×

அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களால் அபாயம்

ஆட்டையாம்பட்டி, பிப்.13: ஆட்டையாம்பட்டியில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. ஆட்டையாம்பட்டி பகுதியை சுற்றியுள்ள வயல்வெளிகளில் தற்போது நெல் அறுவடை நடந்து வருகிறது. அறுவடை செய்த நெல்மணிகளை பிரித்தெடுத்து விட்டு வைக்கோல்போர்களை விவசாயிகள் ஆங்காங்கே வயல்களில் போட்டு வைத்துள்ளனர். ஒரு சிலர், நெற்கதிர்களை உருளை வடிவத்தில் கட்டி பாதுகாப்பாக லாரிகளில் அடுக்கி வைத்து செல்கின்றனர். ஆனால் பெரும்பாலானோர், அப்படியே லாரிகளில் குப்பை போல் குவித்து மேலே சிறிய படுதா போட்டு கொண்டு செல்கின்றனர். குறுகலான சாலையில் அதிக பாரத்துடன் செல்லும் வாகனங்களால், பின்னால் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் உரசினால் தீப்பிடிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, பாதுகாப்பற்ற நிலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் அதிக பாரத்துடன் செல்லும் வாகனங்களை அதிகாரிகள் கவனித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கிளி வளர்த்த 3பேருக்கு ₹15 ஆயிரம் அபராதம்