×

கெங்கவல்லி அருகே மாயமான கல்லூரி மாணவி மீட்பு

கெங்கவல்லி, பிப்.13: கெங்கவல்லி அருகே ஒதியத்தூரைச் சேர்ந்தவர் பொன்னரசன். இவரது மகள் கிருத்திகா (18) தலைவாசலில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4 மாதமாக ஆத்தூர் அடுத்த மல்லிகரை பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் மகன் மணிகண்டன் (22) என்வருடன் கிருத்திகாவுக்கு காதல் ஏற்பட்டது. இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கல்லூரிக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கல்லூரி மற்றும் உறவினர் வீடுகளில் விசாரித்தனர். ஆனால் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து பொன்னரசன், கெங்கவல்லி போலீசில் தனது மகளை மணிகண்டன் கடத்தி சென்றதாக புகார் தெரிவித்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் வேளாங்கண்ணியில் உள்ள தனது மாமாவின் வீட்டுக்கு சென்றுள்ளதாக தெரியவந்தது.  இதை தொடர்ந்து மாணவி கிருத்திகாவை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தன்னை யாரும் கடத்தவில்லை என கூறியதால், பெற்றோருடன் மாணவியை போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags : college student ,Kengavalli ,
× RELATED அரசமரத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்