ஜலகண்டாபுரம், பிப்.13: ஜலகண்டாபுரத்தை அடுத்த ஆவடத்தூர் கிராமம், ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி செல்வி (35). தறி தொழிலாளியான இவர், நேற்று மதியம் வீட்டினுள் தறி ஓட்டிக்கொண்டிருந்துள்ளார். அப்போது யாரோ வருவதுபோல் சத்தம் கேட்டதையடுத்து வெளியே வந்து பார்த்தார். அப்போது வீட்டின் வெளியே வைத்திருந்த கேஸ் சிலிண்டரை பைக்கில் வந்த இருவர் தூக்கிக்கொண்டு செல்வதை பார்த்து செல்வி சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை துரத்திப்பிடித்து ஜலகண்டாபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது சூரப்பள்ளி கிராமம், செல்லப்பனூர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன்களாகிய கண்ணன் (26), அவரது தம்பி லிங்கேஷ்வரன் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.