குமாரபாளையம், பிப்.13: குமாரபாளையத்தில் நகர திமுக செயற்குழு கூட்டம், அவைத்தலைவர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், வார்டு பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். புதிய நகர பொறுப்பாளராக முன்னாள் நகர மன்றத்தலைவர் சேகரை நியமனம் செய்த, தலைவர் மு.க. ஸ்டாலின், பரிந்துரைத்த நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. சேலம் சாலையில் மறைந்த முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்க ஒப்புதலும், அந்த சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் கையால் திறந்து வைப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், குமாரபாளையம் ஊருக்குள் இயங்கி வந்த தலைமை தபால் நிலையத்தை, ஊருக்குள்ளேயே அமைக்க வலியுறுத்தி, நாளை (14ம்தேதி) பள்ளிபாளையம் பிரிவு சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குமாரபாளையம் நகர அலுவலகத்தில் ஒரு லட்சம் நூல்களை திரட்டி, கருணாநிதி பெயரில் நூலகம் அமைப்பது எனவும், மார்ச் 31ம்தேதி 33 வார்டுகளிலும் தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.