தேவதானப்பட்டி, பிப்.13: தேவதானப்பட்டியில் கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி உள்பட 30க்கும் மேற்பட்ட உட்கடை கிராமங்கள் உள்ளன.
இந்த பகுதியில் நடப்பாண்டில் மக்காச்சோளம் சாகுபடி குறைந்த அளவே செய்யப்பட்டிருந்தது. கடந்த வருடம் மக்காச்சோள சாகுபடியில் படைப்புழு அதிகளவில் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். இதனால் படைப்புழு தாக்குதலுக்கு பயந்து விவசாயிகள் குறைந்தளவே நடப்பாண்டில் சாகுபடி செய்தனர். அப்படி சாகுபடி செய்த மக்காச்சோளத்தில் அதிக மருந்து தெளித்து பயிரை காப்பாற்றினர்.
அதிக செலவினங்களை சந்தித்த விவசாயிகள் தற்போது அறுவடை செய்யும்போது விலை குறைந்துள்ளதால் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர்.
கடந்த ஆண்டு அதிகபட்சமாக ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.25 வரை விற்பனையானது. ஆனால் தற்போது அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.17 வரை விற்பனையாகிறது. இந்த விலை குறைவால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.