×

திருமயம் அருகே குண்டும், குழியுமான சாலையால் மக்கள் அவதி

திருமயம், பிப். 13: திருமயம் அருகே சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சாலையை விரைந்து சீரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள புலிவலம் ஆளில்லா கிராசிங் இருந்தது. இந்த ஆளில்லா கிராசிங்கை கடந்தாண்டு அகற்றி விட்டு சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அப்போது அப்பகுதி மக்கள் சுரங்கப்பாதை அமைத்தால் மழை காலங்களில் சுரங்கப்பாதையில் நீர் தேங்குவதோடு கனரக வாகனங்கள் செல்ல முடியாது என எதிர்ப்பு தெரிவித்து கேட்கீப்பருடன் ரயில்வே கேட் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்க மறுத்த ரயில்வே நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்வதாக கூறி பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி புலிவலம் சாலையை புதிய வழித்தடத்தில் கண்மாயை தூர்த்து ஒரு கிலோ மீட்டர் புதிய சாலை அமைத்து செங்கீரை சாலையுடன் இணைத்தனர். இதையடுத்து புலிவலம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு இந்த மாற்றுப்பாதை சிரமமாக இருந்தபோதிலும் வேறு வழியின்றி பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்த ஒரு சில மாதத்தில் பெய்த மழையில் சாலை தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் விரைந்து சீரமைத்து தருமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதைதொடர்ந்து கண்மாய் நீரில் சாலை மூழ்கிய பகுதியில் சாலையோரம் தடுப்புச்சுவர் கட்டிய அதிகாரிகள், பழுதடைந்த சாலையை சீரமைக்க காலம்தாழ்த்தி வந்தனர். தற்போது கண்மாய் பகுதியில் தடுப்புசுவர்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லையென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டதோடு மழை காலங்களில் கனரக வாகனங்கள் நடுரோட்டில் புதையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்த சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனிமேலும் காலம் தாழ்த்தாமல் சேதமடைந்த புலிவலம் சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பலநாள் கோரிக்கையாக உள்ளது.

கண்டுகொள்ளாத அதிகாரிகள்
கண்மாய் நீரில் சாலை மூழ்கிய பகுதியில் சாலையோரம் தடுப்புச்சுவர் கட்டிய அதிகாரிகள், பழுதடைந்த சாலையை சீரமைக்க காலம்தாழ்த்தி வந்தனர். தற்போது கண்மாய் பகுதியில் தடுப்புசுவர்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லையென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : dump ,Thirumayam ,dirt road ,
× RELATED திருமயம் அருகே டிரைவருக்கு திடீர் வலிப்பு பஸ் மரத்தில் மோதி நின்றது