×

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள்

தூத்துக்குடி, பிப்.13: தூத்துக்குடி மாவட்டத்தில், வருவாய்த்துறையின் மூலம் நாளை (14ம் தேதி) அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (14ம் தேதி) தாசில்தார்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

தூத்துக்குடி வட்டத்தில் அய்யனடைப்பு கிராமத்திலும், வைகுண்டம் வட்டத்தில் வைகுண்டம் கிராமத்திலும், திருச்செந்தூர் வட்டத்தில் மணப்பாடு கிராமத்திலும், சாத்தான்குளம் வட்டத்தில் கொம்மடிக்கோட்டை கிராமத்திலும், கோவில்பட்டி வட்டத்தில் கழுகுமலை கிராமத்திலும், விளாத்திகுளம் வட்டத்தில் முத்துசாமிபுரம் கிராமத்திலும், எட்டயபுரம் வட்டத்தில் அயன்வடமலாபுரம் கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் மலைப்பட்டி கிராமத்திலும், கயத்தார் வட்டத்தில் கே.சிதம்பராபுரம் கிராமத்திலும், ஏரல் வட்டத்தில் அங்கமங்கலம் கிராமத்திலும் முகாம் நடைபெறும்.

மேற்படி முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு-இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.

Tags : Villages ,Thoothukudi district ,
× RELATED லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த காட்டு யானை