உத்திரமேரூர், பிப்.13: உத்திரமேரூர் அருகே மானாம்பதி அரசு பள்ளியில் ஸ்மார்க் கிளாஸ் வகுப்பறை திறக்கப்பட்டது.உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு மானாம்பதி, விசூர், கண்டிகை, ஆரோக்கியபுரம் மற்றும் சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து 934 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 30 ஆசிரியர்கள் உட்பட 38 பேர் பணியாற்றி வருகின்றனர்.இப்பள்ளி 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. பாடப்பிரிவு மட்டுமின்றி பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு தடகள போட்டிகளிலும் கலந்து கொண்டு சாதனை படைத்து வருகின்றனர்.
மேலும் இப்பள்ளியில் ஆங்கில வழி கல்வி, கடந்த 2014ம் ஆண்டு முதல் கற்பிக்கப்படுகிறது. இதில் ஏழை எளிய மாணவர்கள் பலர் படித்து சாதனை படைக்கின்றனர்.இந்நிலையில், பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்காக கடந்த ஆண்டு அரசு சார்பில் ஸ்மார்ட் வகுப்பறை துவங்கப்பட்டது. இதனால் மாணவர்கள் கற்பிக்கும் திறன் மேலும் அதிகரித்தது. இதை தொடர்ந்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல லட்சம் மதிப்பீட்டில் 8 முதல் பிளஸ் 2 வரை 10 வகுப்பறைகளுக்கும் ஸ்மார்ட் கிளாஸ் அறைக்கு தேவையான அனைத்து தடவாளப் பொருட்களையும் பெற்றோர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வந்து அமைத்து கொடுத்துள்ளன. மேலும், பள்ளியில் உள்ள வகுப்பறைகளுக்கு வர்ணம் பூசி, தமிழ் புலவர்களை போற்றும் வகையில் அவர்கது பெயரை ஒவ்வொரு வகுப்பறைக்கும் வைத்துள்ளனர். இப்பணிகள் முடிவடைந்த நிலையில் ஸ்மார்ட் கிளாஸ் அறை துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் மாணவர்கள் பாடம் எடுக்க ஆசிரியர்கள் மாணவர்களோடு அமர்ந்திருந்தது பெற்றோர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.