×

சுற்றுச்சுவர் அமைக்காததால் சமூக விரோதிகளின் கூடாரமான கால்நடை மருத்துவமனை

திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த புதுச்சத்திரம் அருகே அரசு கால்நடை மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது புதுச்சத்திரம் ஊராட்சி.  இப்பகுதியில், நெடுஞ்சாலையோரம் கால்நடை அரசு மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனைக்கு, புதுச்சத்திரம், அரண்வாயல்குப்பம், நேமம், ஜமீன் கொரட்டூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கால்நடை விவசாயிகள், தங்களது கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வருகின்றனர்.இந்நிலையில், நெடுஞ்சாலையோரம் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சுற்றுச் சுவர் இல்லாததால் கால்நடைகள் நெடுஞ்சாலைக்கு துள்ளிக் குதித்து ஓடுகின்றன. இதனால், விவசாயிகள், அவற்றைப் பிடிக்க முடியாமல் சிரமம் அடைகின்றனர்.மேலும், சுற்றுச் சுவர் இல்லாததால் சமூக விரோதிகள் கால்நடை மருத்துவமனை அருகில் அமர்ந்து, மது அருந்துகின்றனர். அப்போது, அங்குள்ள ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும், உள்ளே இருக்கும் பொருள்களையும் சேதப்படுத்துகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புதுச்சத்திரம் கால்நடை அரசு மருத்துவமனை கட்டடத்துக்கு சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : clinic ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை...