வலங்கைமான், பிப்.13: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் குடமுருட்டி ஆற்றின் அருகில் வரதராஜம் பேட்டைத்தெருவில் மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இது பக்தர்களால் சக்தி ஸ்தலம் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனிமாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பாடைகாவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் வேறு எங்கும் நடைபெறாத பாடைக்காவடி திருவிழாவில் இந்துக்கள் முறைப்படி இறந்தவர் சடலத்தை எடுத்து செல்வதை போன்று பாடைக்காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். மேலும் தொட்டில்காவடி, அலகுகாவடி, பறவைகாவடி, பால்குடம், அங்கப்பிரதட்சனம், பால்காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர்.
இவ்வாறு புகழ்பெற்ற மகாமாரியம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் கடந்த 2005ம் ஆண்டு நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேகம் செய்யும் விதமாக கோயிலுக்கு வர்ணம் பூசும் பணி மற்றும் யாகசாலை மண்டபம் ஆகியவை அமைக்கும் நடைபெற்றது. அதனையடுத்து கடந்த 8ம்தேதி முதல் யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற யாகசாலை நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார். இதையடுத்து நேற்று காலை 9.30 மணிக்கு ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் சிவக்குமார், தக்கார் ரமணி, மற்றும் ஆலய பணியாளர்கள், தெருவாசிகள் , உபயதாரர்கள் செய்திருந்தனர்.