×

பயறு வகைகளில் விதைப்பண்ணை அமைத்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம்

சிவகங்கை, பிப். 12:  பயறு வகை பயிர்களில் விதைப்பண்ணை அமைத்து  இரட்டிப்பு லாபம் பெறலாம் என விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநர் சாந்தி விடுத்துள்ள அறிக்கை: சிவகங்கை மாவட்டத்தில் தற்போதுள்ள நீர் ஆதாரத்திற்கு ஏற்றவாறு குறுகிய கால பயிறும் மற்றும் நீர் தேவை குறைவான பயிருமான பயறு வகை பயிர்களில் விதைப்பண்ணைகள் அமைத்து கூடுதல் லாபம் பெறலாம். விவசாயிகள் பயறு விதைப்பண்ணை அமைப்பதற்கு  தேவையான ஆதாரம் மற்றும் சான்று நிலை விதைகள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், விதை விற்பனை உரிமம் பெற்ற தனியார் விதை விற்பனை நிலையங்களிலும் பெறலாம். வம்பன் 8, வம்பன் 6 உளுந்து ரக விதைகள், வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

விதைப்பண்ணை அமைக்க விதை வாங்கியதற்கான விற்பனை ரசீது மற்றும் சான்று அட்டை ஆகியவை மிக முக்கியம். பயறு வகை விதைகளை  விதைப்பதற்கு முன்பு பயறு ரைசோபியம் நுண்ணுயிர் பாக்கெட்டை ஆறிய வடிகஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி பின்பு விதைக்கவும். பயறு விதைத்த  35 நாட்களுக்குள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகி விதை பண்ணையை பதிவு செய்ய வேண்டும்.  பதிவு கட்டணமாக ரூ.25ம், விதை பகுப்பாய்வு கட்டணமாக ரூ.30ம், ஒரு விதைப்பு அறிக்கைக்கு செலுத்த வேண்டும். வயலாய்வு கட்டணம் ஏக்கருக்கு  ரூ.50 செலுத்த வேண்டும். பயிர் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும் அடுத்து 15 நாட்கள் கழித்து மறுமுறையும் டிஏபி கரைசல் தெளிக்க வேண்டும். டிஏபி கரைசல் தெளிப்பதனால் பூக்கள் அதிகம் உற்பத்தியாகி கூடுதல் மகசூல் கிடைக்கும். கிணற்றில் தண்ணீர் குறைவாக இருக்கும்பட்சத்தில் தெளிப்பு நீர் பாசனம் அமைத்து நீரை சிக்கனப்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் கூடுதல் மகசூல்  கிடைப்பதுடன், பயறு விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அரசு, பிரிமியம் மற்றும் உற்பத்தி மானியம் வழங்குவதால் இரட்டிப்பு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கோடை வெயிலால் விற்பனை ஜோர் மடப்புரம்...