பழநி, பிப். 12: நெற்பயிர்களை காப்பாற்ற அணையில் இருந்த நீர் திறக்க வலியுறுத்தி பழநி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டவை. இப்பகுதி விவசாயம் இங்குள்ள அணைகளை நம்பியும், அணைகளில் இருந்து நீர்ப்பாசனம் பெறும் கண்மாய்களை நம்பியுமே இருந்து வருகிறது. இந்த வருடம் போதிய மழை பெய்யவில்லை. இதனால் ஆயக்குடி பகுதியில் பயிரிடப்பட்ட சுமார் 700 ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்பயிர்களை பாதுகாக்க வரதமாநதி அணையில் இருந்து பெரிய குளம் நீர்ப்பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டுமென பலமுறை வலியுறுத்தினர். ஆனால் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நெற்பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறக்க கோரி நேற்று பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பொதுப்பணித்துறை அதிகாரிகள் முற்றுகையில் ஈடுபட்ட பெரியகுளம் நீரினை பயன்படுத்துவோர் சங்க விவசாயிகளுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட நிர்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. அதன்பிறகே விவசாயிகள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் இதுதொடர்பாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.விவசாயிகளின் திடீர் முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.