மணப்பாறை, பிப்.12: மணப்பாறை ராஜிவ்நகர் பகுதியில் உள்ள அப்பு அய்யர் குளத்தில் நகராட்சி நிர்வாகம் சாக்கடைக் கால்வாய் இணைப்பதைக் கண்டித்து நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மணப்பாறை ராஜீவ்நகர் அருகே நீர்ப்பிடிப்பு பகுதியான அப்புஅய்யர் குளம் உள்ளது. மழைநீர் சேகரிக்க வேண்டிய அப்புஅய்யர் குளத்தில் எந்தச் சூழ்நிலையிலும் சாக்கடை நீர் கலக்கக்கூடாது என இப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் புதிதாகக் கட்டப்பட்ட சாக்கடைக் கால்வாயை அப்புஅய்யர் குளத்தில் விடாமல் ராஜிவ்நகரில் உள்ள மற்றொரு சாக்கடைக் கால்வாயுடன் இணைத்திட வேண்டுமென கோரிக்கைகளை முன்வைத்து மதிமுக மாநில தேர்தல் பணி செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில் அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டனர்.
இதனையடுத்து நகராட்சி ஆணையரிடம் கலந்து பேசி குளத்திற்குள் சாக்கடை நீர் விடாமல் மாற்றுத் திட்டத்தின்படி சாக்கடையைக் கொண்டு செல்வதாக சுகாதார அலுவலர் நெடுமாறன் உறுதி அளித்ததைத் தொடர்ந்து தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது.