×

கணவன் கண் முன் டிராக்டர் மோதி பெண் பலி

சேலம், பிப்.12: சேலத்தில், கணவன் கண் முன் டிராக்டர் மோதி, மனைவி பலியானார். 108 ஆம்புலன்ஸ்சை மக்கள் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. சேலம் ராமகிருஷ்ணா சாலை சின்னபாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை(52). இவரது மனைவி ராணி(47). இவர்களுக்கு 4 மகன், 4 மகள் என 8 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் நேற்றிரவு 7.30 மணியளவில், அஸ்தம்பட்டிக்கு பைக்கில் சென்றனர். அப்போது அவர்கள் பின்னால், ஒரு டிராக்டர் சென்றது. வளைவில் ஏழுமலை பைக்கை திருப்பினார். அந்த நேரத்தில் டிராக்டர், பைக் மீது மோதியது. இதில், பின்னால் இருந்த ராணி, தலையில் பலத்த காயமடைந்த ரத்தவெள்ளத்தில் சரிந்தார்.

அந்த வழியே வந்த வாகன ஓட்டிகள், 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் கொடுத்தனர். உடனே ஆம்புலன்ஸ் வந்தது. அதில் இருந்து இறங்கிய ஊழியர், ராணியை பரிசோதித்தபோது, அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இதனால், மருத்துவமனைக்கு தங்களால் தூக்கிச் செல்ல முடியாது என ஊழியர் தெரிவித்தார். அப்போது பொதுமக்கள், அடிபட்டவரை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லுங்கள். அங்கு மருத்துவர் பரிசோதித்து பார்த்துவிட்டு, உயிருடன் இருக்கிறாரா?, இல்லையா? என்பதை தெரிவிப்பார். நீங்களை எப்படி இறந்தார் என கூறுகிறீர்கள் எனக்கேட்டு 108 ஆம்புலன்சை முற்றுகையிட்டனர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு ராணியின் மகன்கள் வந்தனர். அவர்கள், ராணியின் உடலை தூக்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்றனர். பின்னர், இதுபற்றி தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடம் வந்து விசாரித்தனர். அவர்கள், ஆம்புலன்சை விடுவித்தனர். பிறகு, ஏழுமலையின் வீட்டிற்கு சென்று ராணியின் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பைக் ஓட்டிய ஏழுமலை குடிபோதையில் இருந்ததும், அவர் ராங் ரூட்டில் சென்று பைக்கை திருப்பி டிராக்டரில் விட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED மைத்துனரின் கட்டை விரலை கடித்தவர் கைது