×

வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு வெங்ககல்பட்டிக்கு செல்ல கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில் தாறுமாறாக செல்லும் வாகனங்கள்

கரூர், பிப். 12: கரூர்-திருச்சி சாலையில் ஆபத்தான முறையில் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்வது குறித்து பார்வையிட்டு சீரமைக்க வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர்-திண்டுக்கல் சாலையில் வெங்ககல்பட்டி பகுதிக்கு முன்னதாக, கரூர் திருச்சி பைபாஸ் சாலை குறுக்கிடுகிறது. இதனால், இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கரூர், வெள்ளியணை போன்ற பகுதிகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தரப்பினர்களும் மேம்பாலத்தின் கீழ்பகுதியை கடந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் ஏற்பட்ட விபத்து முதியவர் ஒருவர் இறந்தார். இதன் காரணமாக மேம்பால கீழ்ப்பகுதியில் உள்ள பாதை அடைக்கப்பட்டது.

இதன் காரணமாக, பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வாகனங்களில் மேம்பாலத்தின் வழியாக செல்வதை தவிர்த்து ஆபத்தான முறையில் பைபாஸ் சாலையை கடந்து செல்கின்றனர். சில சமயங்களில் ஆட்டோ போன்ற வாகனங்களும் கடந்து செல்கின்றன. நிமிடத்துக்கு நிமிடம் ஓய்வின்றி இரண்டு புறமும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில், ஆபத்தான முறையில் பைபாஸ் சாலையை கடப்பதால் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்ற செயல்கள் தடுத்து நிறுத்தப்படுவதோடு, வாகன ஓட்டிகள் எளிதாக, பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்திட வேண்டும் எனவும் பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Motorists ,Venkalapatti ,Karur-Trichy Highway ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...