×

ராஜாக்கமங்கலம் அருகே அம்மன் கோயிலில் கொள்ளையடித்தது பைக் கொள்ளையர்களா?.. வீட்டில் பைக்கை திருட முயன்றதும் அம்பலம்

நாகர்கோவில், பிப்.12:   ராஜாக்கமங்கலம் அருகே அம்மன் கோயிலில் கொள்ளையடித்தது பைக் திருடும் கும்பலாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. ராஜாக்கமங்கலம் அருகே சூரப்பள்ளத்தில் மஞ்சாடி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்த நிலையில் 9ம் தேதி அதிகாலை சுமார் 4.15 மணியளவில் கோயிலில் கொள்ளை நடந்தது. பைக்கில் வந்த ஆசாமிகள் அம்மனுக்கு அணிவித்திருந்த 8 கிராம் காப்பு 1, 4 கிராம் நெற்றிச்சுட்டி 1, ஒரு கிராம் மற்றும் இரண்டு கிராம் எடையுள்ள 2 தாலிகள் ஆகியவற்றை கொள்ளை யடித்து சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக ஊர் தலைவர் கிருஷ்ணபிள்ளை (72) ராஜாக்கமங்கலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மறுநாள் கைரேகை நிபுணர்களும் வருகை தந்து தடயங்களை சேகரித்தனர். கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் இதே கோயிலில் மடப்பள்ளி பூட்டை உடைத்து அதில் இருந்த சுமார் 15 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இரண்டாவது முறையும் நடைபெற்ற கொள்ளை இப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதில் சம்பவம் நடைபெற்ற அன்று அதிகாலை என்பதால் இருள்சூழ்ந்த வேளையில் கோயில் அருகே ஆட்கள் வந்ததால் தாங்கள் வந்த திருட்டு பைக்கை போட்டுவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர். கோயிலில் இருந்து தப்பி சுமார் ஒன்றரை கி.மீ தூரம் மேடுபள்ளங்கள் நிறைந்த தென்னந்தோப்பு, வாழைத்தோட்ட பகுதிகள் வழியாக எளிதாக ஓடி சூரப்பள்ளம் வலியகுளங்கரையை இவர்கள் அடைந்துள்ளனர். பின்னர் அங்கு வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த ஒரு பைக்கை கொள்ளையடித்து அதில் தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். இதற்காக அந்த பைக்கில் இருந்த வயர்களை அறுத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு அது பலன் அளிக்காத நிலையில் பைக்கை அருகே உள்ள தென்னந்தோப்பில் தள்ளிவிட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.  

அதிகாலையில் வீட்டின் முன்பு பைக் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் அக்கம்பக்கத்தில் தேடியபோது வயர்கள் அறுபட்ட நிலையில் பைக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். எனவே கோயிலில் கொள்ளையடித்தவர்களே பைக்கை ஸ்டார்ட் செய்து செல்ல முயற்சித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை நன்கு தெரிந்து வைத்திருந்த ஆசாமிகளே இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம், பைக்கில் வயர்களை அறுத்து ஸ்டார்ட் செய்ய இயலும் என்பதை தெரிந்திருந்ததால் இதில் ஈடுபட்டது பைக் கொள்ளையர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Tags : Bike robbery ,temple ,Amman ,Rajakkamangalam ,
× RELATED ஆற்காடு அருகில் திரவுபதி அம்மன்...