ஈரோடு, பிப். 12: ஈரோட்டில் நேற்று நோயாளி இல்லாமல், விதிமுறை மீறி அதிக ஒலி எழுப்பியபடி வந்த ஆம்புலன்சிற்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். ஈரோடு போக்குவரத்து எஸ்.ஐ. விஜயகுமார் தலைமையில் போலீசார் நேற்று பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிக சத்தத்துடன் ஒரு ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தது. ஆனால் ஆம்புலன்சில் நோயாளிகள் யாரும் இல்லை. அதிக வேகத்துடன் வந்த ஆம்புலன்சை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஆம்புலன்ஸ் டிரைவர் சரவணகுமார் (28) என்பவர் சீருடை அணியாமலும், சீட் பெல்ட் அணியாமலும் ஆம்புலன்சை ஓட்டி வந்தது தெரிய வந்தது.
மேலும் நோயாளிகள் யாரும் இல்லாத நிலையில் சைரனை ஒலித்தபடி வந்துள்ளார். இது தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர் சரவணகுமார் மீது சீருடை மற்றும் சீல் பெல்ட் அணியாதது, ஒலி மாசு ஏற்படுத்தும் வகையில் ஆம்புலன்சை ஓட்டி வந்தது என 3 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரூ.ஆயிரத்து 200 அபராதம் விதித்தனர்.