கடலூர், பிப். 12: புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு பைக்கில் நூதன முறையில் சாராயம் கடத்திய 2 பேரை புதுநகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் அருகே உண்ணாமலை செட்டி சாவடி பகுதிகள் டிஎஸ்பி சாந்தி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் ரகுபதி உள்ளிட்டவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் மூட்டையுடன் வந்த வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பைக்கில் நூதன முறையில் மூட்டைக்குள் சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து சாராய பாக்கெட் மற்றும் பைக்கை பறிமுதல் செய்த போலீசார் 2 வாலிபர்களையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் பிடிபட்டவர்கள் கடலூரை சேர்ந்த கருணாகரன்( 33) மற்றும் குள்ளஞ்சாவடி வன்னியர் பாளையம் பகுதியை சேர்ந்த ராகுல் (20) என்பது தெரியவந்தது. தீவிர விசாரணையில் புதுச்சேரியிலிருந்து நூதன முறையில் சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்து கடலூர் மற்றும் குள்ளஞ்சாவடி பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.