×

திருட்டு பைக்கில் வந்து கடையில் திருட முயன்றவருக்கு பொதுமக்கள் சரமாரி தர்ம அடி: போலீசில் ஒப்படைப்பு

திருவள்ளூர், பிப். 12: திருவள்ளூர் அருகே கடைக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் துரத்திப்பிடித்து, தர்ம அடி கொடுத்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில் உள்ள கடைகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து திருட்டு சம்பவம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருவள்ளூர்- பெரும்புதூர் சாலையில் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்து வரும் கோபால் என்பவரின் கடையை நேற்று முன்தினம் அதிகாலையில் மர்ம நபர் இருவர் உடைத்துக் கொண்டு இருந்தனர். இதை அவ்வழியாக நடைபயிற்சிக்கு சென்றவர்கள் பார்த்து, சந்தேகமடைந்து விசாரித்துள்ளனர்.

இதனால், சுதாரித்துக்கொண்ட மர்ம நபர்கள், அங்கு தயாராக நிறுத்தி வைத்திருந்த பைக்கை எடுத்துக் கொண்டு தப்பியோடினர். அவர்களை இரு சக்கர வாகனத்தில் பொதுமக்களும் பின்தொடர்ந்து துரத்தினர். இதில், ஒருவர் மட்டும் பிடிபட்டார். மற்றொருவர் தப்பினார். பிடிபட்டவருக்கு தர்ம அடி கொடுத்து மணவாளநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த மதன்குமார் என்பதும், தப்பிய வாலிபர் வெங்கத்தூர் இருளர் காலனி முருகேசன் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள்,  திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள சைக்கிள் ஸ்டான்டில் இருந்து பைக்கை திருடிக்கொண்டு மேல்நல்லாத்தூர், மணவாளநகர் பகுதியில் கொள்ளை அடிக்கவந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து மணவாளநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : shop ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி