செங்கல்பட்டு, பிப்.12: செங்கல்பட்டு அருகே பொத்தேரி பகுதியில் டீ மற்றும் ஜூஸ் கடையில் கொத்தடிமையாக வேலை செய்த வடமாநில சிறுவர்கள் 5 பேரை, மாவட்ட குழந்தைகள் நல அமைப்பினர் மீட்டனர். மறைமலைநகர் அடுத்த பொத்தேரியில் உள்ள 2 டீ, ஜூஸ் கடையில் 15 வயது சிறுவர்கள் பணியில் இருப்பதாக செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள்நல மீட்பு குழுவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில், அதிகாரிகள் நேற்று பொத்தெரியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணியில் இருந்த 15 வயதுக்கு உட்பட்ட பீகாரை சேர்ந்த ரமேஷ் (15) அக்ஷய் (15), ஜெயராமன் (15), கிரிஷ்குமார் (14), கொல்கத்தாவை சேர்ந்த மங்களம் (15) ஆகியோரை மீட்டனர். பின்னர் அவர்களை, செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னையில் உள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பினர். இதுதொடர்பாக மறைமலைநகர் போலீசார், சிறுவர்களை பணியில் அமர்த்திய நாகராஜ், அப்துல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவர்களை தீவிரமாக தேடுகின்றனர்.