சேலம், பிப்.11: சங்ககிரி அருகே உள்ள கள்ளுக்கடை பகுதியை சேர்ந்தவர் செங்கோடன். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி கண்ணம்மாள்(60). அதேபகுதியில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் அவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி அணிந்த 2 பேர், கத்தியை காட்டி மிரட்டி கண்ணம்மாள் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்தனர். பின்னர் பீரோவை திறக்க செய்து, அங்கிருந்த 2 பவுன் எடை கொண்ட 5 தங்க கம்மல், 1 பவுன் மோதிரம், மற்றும் ₹30ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என கூறி மிரட்டி விட்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணம்மாள் சங்ககிரி போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து முகமூடி கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.