ராசிபுரம், பிப்.11: பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டயக் கணக்காளர் பயிற்சி மையம் துவக்க விழா மற்றும் முதலீடுகள் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்க பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். தாளாளர் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி வைத்தார். வணிகவியல் இரண்டாமாண்டு மாணவி கௌரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஆடிட்டர் ஸ்ரீராமன் கலந்து கொண்டு பயிற்ச்சி மையத்தை துவக்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:
பட்டயக் கணக்காளர் படிப்பானது விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தைரியம், பொறுமை போன்ற குணநலன்களை வளர்க்கிறது. மேலும், பொருளாதாரத்தில் சிறந்த தொழிலாகவும், இத்தொழில் விளங்குகிறது. சுமார் 10 லட்சம் பட்டயக் கணக்காளர்களின் தேவை நமது நாட்டிற்கு அவசியப்படுகிறது. ஆனால், தற்போது இரண்டு லட்சத்து ஐம்பாதியிரம் பேர் மட்டுமே உள்ளனர். இந்த படிப்பினை படிக்க மாணவிகள் அதிகளவில் முன்வரவேண்டும். சில நேரங்களில் முதலீடு செய்த தொகையை விட குறைவாகக் கூட கிடைக்கும். அப்போது, முதலீடு செய்தவர்கள் நட்டத்தைச் சந்திப்பார்கள். இதை தவிர்த்திட வேண்டுமென்றால், முதலீடு, முதலீட்டின் தன்மை, வருமானம் வரக்கூடிய ஆண்டுகள், அதிலுள்ள சிரமங்கள், அபாயங்கள் இவற்றை முதலீட்டாளர் தெரிந்திருக்க வேண்டும்.
எனவே, முதலீடு செய்யும் போது காப்பீடு நிறுவனங்கள், வங்கிகள், பரஸ்பரநிதி, நிலம் போன்ற இதர நிலையான சொத்துக்கள் போன்றவற்றை நன்கு ஆராய்ந்தறிந்து, நமக்கு தேவையானது என்ன என்பதையும் தேர்வு செய்து முதலீடு செய்ய வேண்டும். பட்டயக் கணக்காளர் படிப்பிற்கு இந்தியா மட்டுமின்றி அயல்நாடுகளிலும் வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி, தி இன்ஸ்டிடுயூட் ஆப் சார்ட்டடு அக்கௌன்ட்ஸ் ஆப் இந்தியா சேலம் கிளை செயலாளர் பார்கவி, ஆடிட்டர் சாரதா அசோக், மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். இளங்கலை வணிகவியல் மூன்றாமாண்டு மாணவி அனுப்பரியா நன்றி கூறினார்.