கடத்தூர், பிப்.11: கடத்தூர் அரசு மருத்துவமனை அருகே அரசு குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடத்தூர் பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, 30 படுக்கைகள் கொண்ட சுகாதாரநிலையமாக மேம்படுத்தியது. இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவமனை பணியாளர்கள் குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கிராமப்புற செவிலியர்கள் தங்கி இரவு, பகல் பாராமல் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சில ஆண்டுகளாக இந்த குடியிருப்புகளில், மருத்துவ பணியாளர்கள் யாரும் தங்குவதில்லை. இதனால் போதிய பராமரிப்பு இல்லாமல், கட்டிடம் முழுவதும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. எனவே பராமரிப்பின்றி காணப்படும் இந்த குடியிருப்புகளை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.